TET, TRB, TNEB, POLICE & TNPSC / 6 th தமிழ் : தமிழ்க்கும்மி.

 

தமிழ்க்கும்மி

கூட்டமாகக்கூடிக் கும்மியடித்துப் பாடி ஆடுவது மகிழ்ச்சியான அனுபவம். கும்மியில் தமிழைப் போற்றிப் பாடி ஆடுவது பெரும் மகிழ்ச்சி தருவதாகும். வாருங்கள்! தமிழின் பெருமையை வாயாரப் பேசலாம்; காதாரக் கேட்கலாம்; இசையோடு பாடலாம்; கும்மி கொட்டி ஆடலாம்.

தமிழ்க்கும்மி

கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி

இளங் கோதையரே கும்மி கொட்டுங்கடி நிலம்

எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ்

எட்டிடவே கும்மி கொட்டுங்கடி!

ஊழி பலநூறு கண்டதுவாம் அறிவு

ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் பெரும்

ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும்

அழியாமலே நிலை நின்றதுவாம்!

பொய் அகற்றும் உள்ளப் பூட்டறுக்கும் அன்பு

பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும் உயிர்

மெய்புகட்டும் அறமேன்மை கிட்டும் இந்த

மேதினி வாழ்வழி காட்டிருக்கும் !

                                   - பெருஞ்சித்திரனார்


சொல்லும் பொருளும்

1. ஊழி நீண்டதொரு காலப் பகுதி

2. உள்ளப்பூட்டு உள்ளத்தின் அறியாமை

3. ஆழிப் பெருக்கு - கடல் கோள்

4. மேதினி - உலகம் கவிதைப் பேழை


பாடலின் பொருள்

இளம்பெண்களே! தமிழின் புகழ் எட்டுத்திசைகளிலும் பரவிடும் வகையில் கைகளைக் கொட்டிக் கும்மியடிப்போம்.

பல நூறு ஆண்டுகளைக் கண்டது தமிழ்மொழி. அறிவு ஊற்றாகிய நூல்கள் பலவற்றைக் கொண்ட மொழி.

பெரும் கடல் சீற்றங்கள், கால மாற்றங்கள் ஆகிய எவற்றாலும் அழியாமல் நிலைத்திருக்கும் மொழி.

தமிழ், பொய்யை அகற்றும் மொழி; அது மனத்தின் அறியாமையை நீக்கும் மொழி; அன்புடைய பலரின் இன்பம் தரும் பாடல்கள் நிறைந்த மொழி; உயிர் போன்ற உண்மையை ஊட்டும் மொழி ; உயர்ந்த அறத்தைத் தரும் மொழி.

இந்த உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளையும் காட்டும் மொழி தமிழ்மொழி.


நூல் வெளி

1. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம்.

2. இவர் பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.

3. கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக் கொத்து, நூறாசிரியம் முதலான நூல்களை இயற்றியுள்ளார்.

4. தென் மொழி, தமிழ்ச் சிட்டு, தமிழ் நிலம் ஆகிய இதழ்களை நடத்தினார்.

5. தனித் தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் இவர்.

6. இப்பாடல் கனிச்சாறு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. இந்நூல் எட்டுத் தொகுதிகளாக வெளிவந்துள்ளது. இது தமிழுணர்வு நிறைந்த பாடல்களைக் கொண்டது.


வாணிதாசன்

வான்தோன்றி வளி தோன்றி நெருப்புத் தோன்றி

மண் தோன்றி மழை தோன்றி மலைகள் தோன்றி

ஊன் தோன்றி உயிர் தோன்றி உணர்வு தோன்றி

ஒளி தோன்றி ஒலி தோன்றி வாழ்ந்த அந்நாள

தேன் தோன்றியது போல மக்கள் நாவில்

செந்தமிழே! நீ தோன்றி வளர்ந்தாய்! வாழி!


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தாய் மொழியில் படித்தால் ___________ அடையலாம்   

மேன்மை  

2. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் ______ சுருங்கிவிட்டது  

மேதினி

3. ’செந்தமிழ்என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

செம்மை + தமிழ்  

4. ’பொய்யகற்றும்என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

பொய் + அகற்றும்  

5. பாட்டு + இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______

பாட்டிருக்கும்

6. எட்டு + திசை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------

எட்டுத்திசை


Post a Comment

0 Comments